Tuesday, January 12, 2016

மந்தமாகச் செயல்படுகிறது மோடி அரசு!- அமர்த்ய சென் பேட்டி

மந்தமாகச் செயல்படுகிறது மோடி அரசு!- அமர்த்ய சென் பேட்டி
   
முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிக மந்தமாகச் செயல்படுகிறது, வாக்குறுதிப்படி செய்துமுடிக்கத் தவறிவிட்டது என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்ய சென். அவரது பேட்டி:
பொருளாதார ஒழுங்கமைவு எந்த திசை நோக்கிச் செல்கிறது என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் ஏற்றுக்கொள்ளும் திசையில் செல்கிறதா?
ஏராளமான மாறுதல்கள் நிகழ்கின்றன, அவற்றில் பல அங்கீகரிக்கப்பட வேண்டியவை. பொருளாதாரக் கொள்கைகளின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட பலன்கள் புள்ளிவிவரங்களில் எதிரொலிக்கின்றன என்பது ஆக்கப்பூர்வமான நிகழ்வு. கணிதவியல் அடிப்படையி லான பொருளாதாரமும், கணிதம் சாராத பொருளாதாரத் தேற்றங்களும் இணைக்க முடியாதவை அல்ல; பாரம் பரியமான பொருளாதாரச் சிந்தனைகளில் பல, இந்திய அரசின் நிர்வாகக் கொள்கைகளில் சேர்க்கப்படவில்லை. எதிர்காலப் பொருளாதாரத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது, இதுவரை பயனளித்துவரும் பொருளாதாரக் கொள்கைகளின் மீது கவனம் செலுத்தாமல் பலனை அடைய முடியாது.
இந்தியாவுக்கான பாடங்கள் எவை?
பொருளாதாரம் கற்றுத்தரும் 3 முக்கிய பாடங்கள் முழுதாக மதிக்கப்படவில்லை.
முதலாவதாக, பொருளாதாரம் வேகமாக வளரவும் மேம்பாடு அடையவும் வெற்றிகரமான சந்தை அமைய வேண்டும். அது இப்போது கவனிக்கப்படுகிறது. ஆனால் மோடி அரசு சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் மிகவும் மந்தமாக இருக்கிறது, வாக்களித்த சில சீர்திருத்தங்களைக்கூட இன்னமும் மேற்கொள்ளவில்லை.
இரண்டாவதாக, சந்தை சார்ந்த பொருளாதாரமானது தொழிற்சாலைகளுக்கும் விவசாயத்துக்கும் நன்மைகளைச் செய்தாலும் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு நன்மைகளைச் செய்யவில்லை. இந்த இடத்தில்தான் ஒரு அரசு தன் பங்கைச் செய்ய வேண்டும். இதை ஆடம் ஸ்மித் 1776-லேயே கூறினார். அது புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணி அரசு இத்திசையில் குறைவாகச் செயல்பட்டது; மோடி அரசு அதைவிட மோசம்.
மூன்றாவதாக, சமச்சீரற்ற தகவல்கள். விற்பனையாளர் எதை விற்கிறார் என்பதே நுகர்வோருக்குத் தெரியாதது பெரும்பாலும் நிகழ்கிறது. சந்தைப் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள இது மிகவும் அடிப்படையானது. பொதுச் சுகாதாரத்தை அரசு வழங்காமல், மருத்துவ சேவையைத் தனியாரிடம் விடும் எண்ணம் இதனால்தான் ஏற்படுகிறது. இந்தியா உள்பட எந்த நாட்டிலும் இப்படிச் செய்வது சாத்தியமே இல்லை.
அனைவருக்கும் கல்வி, மருத்துவ சேவை போன்ற வற்றைத் தனியார் துறை மூலம் அளிக்க இந்தியா மட்டுமே முயல்கிறது. ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, வியத்நாம், கியூபா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வலதுசாரிகள் ஆண்டாலும் இடதுசாரிகள் ஆண்டாலும் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகள் அரசிடம்தான் முழுக்க முழுக்க இருக்கின்றன. அவ்விரு சேவைகளும் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.
அனுபவ அறிவை அதிகம் சார்ந்திருப்பது, கோட்பாடு சார்ந்த பொருளாதாரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கருதுகிறீர்களா?
அனுபவம் சார்ந்த பொருளாதாரக் கொள்கையையும், கோட்பாடு சார்ந்த பொருளாதாரக் கொள்கையையும் ஒரு காரணமும் இல்லாமல் உருவாக்கலாம். பொருளாதாரம் என்பது அனுபவம் சார்ந்த ஒன்று என்பதை அங்கீகரிக்க வேண்டும்; கோட்பாடானது நிஜ உலகில் ஏற்படும் அனுபவங்களைப் பற்றியதே. உலகம் எப்படி இயங்குகிறது என்பதைச் சொல்லும் அதே நேரம், எப்படி இயங்கினால் (பொருளாதார ரீதியாக) நல்லது என்றும் சொல்வதே கோட்பாடு. இக்கூறுகளைக் கொண்டதுதான் நல்ல பொருளாதாரக் கொள்கை. இதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை அல்ல என்று நீங்கள் கருதலாம். ஒரு பொருளாதாரம் நன்றாகச் செயல்படுகிறதா, இல்லையா என்று மதிப்பிட சில வழிகள் இருக்கின்றன. நடுநிலையுடன் அணுகத் தயாராக இருந்தால் இது சாத்தியமே.
பொருளாதார வளர்ச்சிக்கு ஜான் மேனார்ட் கீன்ஸ் காட்டிய அணுகுமுறை இன்றைக்கும் பொருத்தமானது என்று கருதுகிறீர்களா?
வேலைவாய்ப்பு, உற்பத்திப் பெருக்கம் தொடர்பான அவருடைய கோட்பாடுகளைத்தான் கீன்ஸின் அணுகுமுறை எனக் கூறுகிறீர்கள் என்று கருதுகிறேன். உலகின் பல நாடுகளுக்கு இன்றைக்கும் அது பொருந்திவருகிறது. அவருடைய கோட்பாட்டின் சில முக்கிய அம்சங்களை ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாளுமன்றத்திலும் புறக்கணித்துவிட்டார்கள். ஆனால் அமெரிக்காவின் மத்திய வங்கி அதை மறந்துவிடவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி குறைந்து, வேலைவாய்ப்பு சரிந்து, மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அரசின் வரவுக்கேற்றபடி செலவைக் குறைக்கும் சமநிலை பட்ஜெட்டுக்கு அவை முக்கியத்துவம் தருவது புத்திசாலித்தனமாக இல்லை. பொதுக் கடனுக்கும் தேசிய வருவாய்க்கும் உள்ள விகிதம் அதிகரித்ததையே பெரிதாகக் கருதுகின்றனர். ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கொள்கையில் ஒரேயொரு அம்சத்துக்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தை அளிக்கின்றனர். பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது அரசு தன்னுடைய செலவை அதிகப்படுத்த வேண்டும், பற்றாக்குறை பட்ஜெட் பற்றி கவலைப்படக்கூடாது, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று கீன்ஸ் சொல்லித் தந்ததை மறப்பது மிகப்பெரிய தவறு.
இந்தியாவிலும் பொருளாதாரக் கொள்கையிலும் அணுகுமுறைகளிலும் தவறுகள் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் சரி, இப்போது பாஜக கூட்டணி அரசிலும் சரி கீன்ஸின் பேரியல் பொருளாதாரக் கோட்பாடுகள் பெரும்பாலும் அமல்படுத்தப்படுவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
மோடி தலைமையிலான அரசு இரண்டாம் ஆண்டின் இறுதிப்பகுதியை நோக்கிச் செல்கிறது; முதலாண்டு முடிவில், மோடி அரசின் வளர்ச்சிக் கொள்கையானது பெருநிறுவனங்கள் சார்ந்திருக்கிறது, தனிநபர் வளர்ச்சி சார்ந்து இல்லை என்று கூறியிருந்தீர்கள்?
நான் அப்படிக் கூறினேனா? தொழில்துறையில் முதலீடு செய்தால் மட்டும் போதும் என்று கருதுகிறார்கள்; கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக முதலீடு செய்து பெருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை என்றுதான் குறிப்பிட்டேன். அது முதலாண்டின் இறுதியில் மட்டுமல்ல, முதலிலும்கூட அப்படித்தான். அது அவர்களுடைய கொள்கை; இப்போதும் அதே நிலைதான். காங்கிரஸ் கூட்டணி அரசு கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளை மிக மோசமாக அலட்சியப்படுத்தியது, பாஜக கூட்டணி அரசில் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.
திறன்மிகு இந்தியா, ஜன் தன் யோஜனா, காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவை தனி நபர் வாழ்க்கை நிலையை மேம்படுத்துபவை. அவற்றை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
இந்திய மக்களை அடிப்படையில் பாதிப்பது கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசின் முதலீடு குறைவாக இருப்பதுதான். ‘புதுமை போல’த் தோற்றமளிக்கும் திட்டங்கள் எத்தனை வந்தாலும் தகுந்த கல்வி பெறாத, முறையான சுகாதார வசதிகளைப் பெற முடியாத தொழிலாளர்களால் உற்பத்தியைப் பெருக்கவும் முடியாது, அதிக வருவாயையும் அவர்களால் ஈட்டவும் முடியாது. எனவே பொருளாதாரத்திலும் உயர் வளர்ச்சியை அவர்களைக் கொண்டு எட்டுவது இயலாது. அரசின் திட்டங்கள் புதுமை போலத் தோன்றுவனவே தவிர உண்மையில் பெரும் பயனைத் தரவல்லவை அல்ல.
சமையல் எரிவாயு மானியத்தை வழங்குவதிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திலும் பயனாளிகளுக்கு பணப்பயனை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்குக்கு மாற்றிவருகிறது அரசு. இது நன்கு செயல்படுகிறது என்று கருதுகிறீர்களா, பொது விநியோக திட்டத்துக்கும் (ரேஷன் முறை) இது விரிவுபடுத்தப்பட வேண்டுமா?
சமையல் எரிவாயு மானியத்தை முழுதாக விலக்க வேண்டும் என்று நான் திரும்பத் திரும்பப் பரிந்துரைத்து வருகிறேன். அதை இன்னமும் அவர்கள் செய்யவில்லை. எல்லோருக்குமே மானியத்தை வெட்ட வேண்டும். இந்தியா வின் பல பகுதிகளுக்கு மின்சார இணைப்பே இல்லாத போது பெரும்பாலானவர்களிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது அல்லது இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது, இது நல்லதே அல்ல. இவையெல்லாம் மாற்றப்பட வேண்டும். எல்லோருக்கும் மின்சார வசதி கிடைக்க வேண்டும், அதற்கு எல்லோரும் உரிய கட்டணம் செலுத்தியாக வேண்டும். காங்கிரஸ் அரசைவிட மோடி அரசு மானியங்களைக் குறைப்பதை நன்றாகச் செயல்படுத்தி வருகிறது. ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அவர்கள் முதலில் கடுமையாக எதிர்த்தார்கள், இப்போது மனம் மாறி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
மானியங்களை நேரடியாக வங்கிக் கணக்குக்கு மாற்றுவது சாத்தியமா, தொடருமா?
இதில் சில நன்மைகளும் உண்டு, சில தீமைகளும் உண்டு. பாலினப் பாகுபாடு குடும்பத்தில் இருந்தால் பாதிப்புகள் உண்டு. ஒரு குடும்பத்துக்குக் கிடைக்கும் வருவாயில் அதிகம் ஆண் பையன்களுக்குச் செலவிடப்படும் பெண் குழந்தைகளுக்குக் குறைவாகச் செலவிடப்படும். பணமாகத் தருவதற்குப் பதில் பண்டமாகத் தந்தால் இது நேராது. இந்த நடைமுறை ஏன் அனைவரையும் ஈர்க்கிறது என்று புரிகிறது, அதே வேளையில் இதன் பாதகமான அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
டெல்லி மாநகரில் ஒற்றைப்படை எண் வாகனங்கள் ஒரு நாளும் இரட்டைப்படை எண் வாகனங்கள் இன்னொரு நாளும் செல்ல வேண்டும் என்ற ஏற்பாட்டைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
(சிரிக்கிறார்) அவர்கள் அளவுக்கு நான் பெரிய ‘சிந்தனாவாதி’ அல்ல!
ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஃப்ரீ பேசிக்ஸ் என்ற திட்டம் குறித்து?
மக்கள்தொகையில் பாதிப்பேர் பள்ளிக்கூடம் போய் படிக்கவில்லை என்னும்போது, இணையதளம் குறித்து இந்த அளவுக்குக் கவனம் செலுத்துவது தவறு என்றே கருதுகிறேன்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி

No comments: