Sunday, January 30, 2011

100க்கு 120 மார்க்


தனது தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்த பள்ளியிலேயே அவர் படித்தது தப்பாப் போச்சு. கணக்கு பாடத்தில் அவர் எடுத்த 90 மதிப்பெண், அப்பா முன் கூட்டியே கேள்விகளைச் சொல்லிவிட்டதால்தான் என்ற பழி விழுந்தது. ஆசிரியரான அப்பாவால் இதைச் சகிக்க முடியாமல் தலைமை ஆசிரியரிடம் சென்று தனது பையனுக்குத் தனியே முன்னறிவிப்பு இல்லாமல் தேர்வு நடத்துமாறு கேட்டுக் கொண்டார். அப்படியே தேர்வும் நடந்தது. தலைமை ஆசிரியர் 12 கணக்குகள் கொடுத்து ஏதாவது 10 கணக்கு போடச் சொன்னார். மாணவரோ 12 கணக்குகளையும் சரியாகப் போட்டுவிட்டார். அவரின் திறமையை அறிந்து கொண்ட தலைமை ஆசிரியர் 100க்கு 120 மதிப்பெண்கள் வழங்கினார். மாணவர் மீதும் ஆசிரியத் தந்தை மீதும் விழுந்த பழிச் சொல் அகன்றது.

மாணவப் பருவத்தில் 100க்கு 120 மதிப்பெண் பெற்றவர் சிஎஸ்பி என தொழிலாளிகளால் அன்புடன் அழைக்கப்படும் மறைந்த தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் தான். அவர் கணக்கு பாடத்தில் மட்டும் அல்ல பிந்தைய வாழ்க்கை முழுவதுமான தொழிற்சங்க போராட்டத்தில், தொழிலாளர்களுடனான தோழமையில், ஏழ்மையிலும் நேர்மையில், எளிமையில், சமரசமில்லாத ஸ்தாபன போராட்டத்தில் 100க்கு 120 மதிப்பெண் பெற்று அனைவரிடத்திலும் மதிப்பைப் பெற்றார்.

தபால் தந்தித் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் மத்திய மாநில அரசு ஊழியர்களின் பல பிரிவுகளிலும் இருந்த ‍இருக்கின்ற தலைவர்கள் அவரால் உருவாக்கப்பட்டோம் என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக்கொள்வதிலிருந்தே தோழர் பஞ்சாபகேசனின் பணிச்சிறப்பை உணரமுடியும். நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள கே ராகவேந்திரன் இதற்கு உதாரணமாக திகழ்கிறார்.

வெளி வாழ்க்கை ஒன்றும் குடும்ப வாழ்க்கை வேறொன்றுமாக இல்லாமல் தன் வழியிலேயே மனைவி மக்களையும் கொண்டு வந்த பெருமைக்குரியவர் அவர்.

இவரது பன்முகத் தன்மைகளை இளம் தலைமுறையினர் பாடமாகக் கற்க, வரலாறு படைக்கும் என் ராமகிருஷ்ணன் நூலாக்கித்தந்துள்ளார். வாங்கி படித்து பாது காக்க வேண்டிய நூலகளில் இதுவும் ஒன்று.

சி எஸ் பஞ்சாபகேசன்
இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை, என் ராமகிருஷ்ணன்,
வெளியீடு: உழைக்கும் வர்க்கம், 191/50, தர்கா ரோடு, சென்னை 600043
பக்கம் 108 ரூ 60/=
நன்றி தீக்கதிர். 30.01.2011