Tuesday, January 12, 2016

வஞ்சிக்கப்படும் வங்கி முகவர்கள்

வஞ்சிக்கப்படும் வங்கி முகவர்கள்
   
சொற்ப சம்பளம், தாங்க முடியாத வேலைப் பளுவுடன் பணி செய்கிறார்கள் தொழிலாளர்கள்
வங்கிகளில் கணினி முன்பு அமர்ந்து பணி செய்யும் வங்கி எழுத்தர்களைத்தான் பொதுவாக எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால், எழுத்தர்கள் மற்றும் காசாளர்கள் செய்யும் அத்தனை வேலையையும், வங்கிக் கிளையிலேயே அமராமல், வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் சுற்றியலைந்து பணி செய்யும் வங்கி ஊழியர்களைப் பற்றி பொதுவாக யாருக்கும் தெரியாது. ஏன், கணிசமான வங்கி ஊழியர்கள், அதிகாரிகளுக்குக்கூட அப்படி ஒரு பகுதி ஊழியர்களைப் பற்றியோ, அவர்களின் பரிதாப பணிநிலை பற்றியோ தெரியாது. வியாபார முகவர்கள் என்ற பெயரில் சொற்ப சம்பளத்தில் கிராமப்புறங்களிலும், சிறு நகர்ப்புறங்களிலும் 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கப்படுகிறார்கள் இவர்கள்.
கடும் பணிச் சுமை
இவர்களது அன்றாட பணியைப் பற்றித் தெரிந்து கொண்டால் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியும். காலை கிளை திறப்பதற்கு முன்னால் வர வேண்டும். மாலை கிளை மூடும் வரை இருக்க வேண்டும். மாதச் சம்பளம் சராசரியாக ரூ. 2,500. கொண்டுசெல்லும் ஸ்மார்ட் மெஷினின் நெட் கார்டு ரீசார்ஜுக்கு ரூ. 200, பெட்ரோலுக்கு ரூ. 300 என்று மொத்தம் ரூ. 3,000 கிடைக்கும். ஒரு பண வரவு அல்லது பட்டுவாடாவுக்கு கமிஷனாக ஒரு ரூபாய். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 60 பட்டுவாடாவுக்கு மேல் செய்ய முடியாது. பெரும்பாலான பணியாளர்களின் நிலை இதுதான்.
இவை போதாதென்று வேறு பிரச்சினைகளும் உண்டு. கிராமங்களில் சிக்னல் கிடைக்காததால் ஸ்மார்ட் மெஷின் வேலை செய்யாது. இதனால், பட்டுவாடா தாமதமாகும். முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், நூறு நாள் வேலைத் திட்டச் சம்பளம் என்று பல பணிகளை இவர்கள் செய்கிறார்கள். இவற்றைத் தவிர, பிரதம மந்திரி ஜன் தன் கணக்குத் திறப்பது, இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ப்பது என்று புதுப் புது வேலைகள் கொடுக்கப்படுவதால் பணிச்சுமையைத் தாங்க முடியாமல் அல்லாடுகிறார்கள். இரண்டு சக்கர வாகனம்கூட இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அவற்றை வாங்கக் கடனும் கொடுக்கப்படுவதில்லை. சொந்த வண்டியில் லட்சக்கணக்கான தொகையுடன் சென்றுவருவதில் இருக்கும் பிரச்சினைகள் இவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கின்றன.
இப்படிச் சுரண்டப்படும் வங்கி முகவர்களின் எண்ணிக்கை அகில இந்திய அளவில் சுமார் இரண்டு லட்சம் இருக்கும். இவர்கள் பொதுத் துறை, தனியார் துறை, கிராம வங்கிகளால் நேரடியாகவோ அல்லது பெரிய முகவர்கள் மூலமாகவோ பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் இருக்காது. பல வங்கிகள் இவர்களின் பெயர்களை அவற்றின் அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளன. ஆனால், எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் கணிசமானவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவ்வேலையில் இருப்பவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் உள்ள, வேறு எந்த வேலைவாய்ப்பும் இல்லாத ஏழை வாலிப, நடுத்தர வயதான ஆண்களும் பெண்களும்தான். எல்லா வங்கிப் பணிகளையும் செய்யும் இத்தகைய வியாபார முகவர்கள் வங்கி ஊழியர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.
மூல காரணம் ரிசர்வ் வங்கி
வங்கிப் பணிகளை வெளியாட்களுக்கு விடுவதற்கு முக்கியக் காரணம், 2006-ல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட கொள்கை அறிவிப்பில், “பொதுத் துறை வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் கேந்திரமான நிர்வாகப் பணிகள் தவிர, மற்ற அனைத்துப் பணிகளையும் வெளியாட்களுக்கு விட்டுவிடலாம்” என்று பகிரங்கமாகக் கூறப்பட்டுள்ளதுதான்.
கூடவே, இவ்வாறு ‘அவுட்சோர்ஸ்’ செய்வதால் நிறுவனத்தின் பெயர் கெடுதல் உள்ளிட்ட பத்து வகையான ஆபத்துகள் உள்ளன. எனவே, பார்த்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்கிறது ரிசர்வ் வங்கி.
முறையான பணியாளர் மூலமாக நடைபெறும் தொடர்ச்சியான பணியை வெளியாட்களிடம் விடுவதை, ஒப்பந்தத் தொழில் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டம் 1970 தடை செய்கிறது. வங்கி நிர்வாகங்களுக்கும், ஊழியர் சங்கங்களுக்கும் இடையே 2005-ல் போடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தில், வங்கிப் பணியாளர்கள் மூலம் செய்ய முடியாத, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த விசேஷ நடவடிக்கைகள் தவிர, எதையும் வெளியாட்களுக்கு விடக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டப்படி, ஒப்பந்தப்படி தடுக்கப்பட்ட தொடர் பணிகள் ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பின் காரணமாகத்தான் வெளியாட்களுக்கு விடப்படுகின்றன.
ஒருபுறம் 10 வகையான ஆபத்துகளைச் சுட்டிக்காட்டிய ரிசர்வ் வங்கி, மறுபுறம் தனது முன் அனுமதி இல்லாமல் எந்த வங்கி வேண்டுமானாலும் வங்கிப் பணியை உள்நாட்டு, வெளிநாட்டு முகவர்களிடம் விட்டுவிடலாம் என்று அறிவித்து, தனது பொறுப்பை முழுமையாகத் தட்டிக்கழித்துவிட்டது.
செலவே பிரதான காரணம்
“உலகம் முழுவதும் நிரந்தர வங்கிப் பணிகள் மேலும் மேலும் வெளியாட்களுக்கு விடப்படுவதற்கு, செலவுக் குறைப்பும் விசேஷ நிபுணத்துவம் பெறுவதுமே பிரதான காரணங்கள்” என்று ரிசர்வ் வங்கி, இக்கொள்கை அறிவிப்பின் அறிமுகப் பகுதியில் கூறுகிறது. வியாபார முகவர்கள் மூலமாக விசேஷ நிபுணத்துவம் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். எனவே, செலவுக் குறைப்பு மட்டும்தான் முக்கியக் காரணம்.
இந்நிலையில், சென்ற ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்றதுபோலவே இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 14 முதல் 16 வரை மீண்டும் ‘க்யான் சங்கம்’ என்று பெயரிடப்பட்ட பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுத் துறை வங்கிகளைச் சுற்றி வளைத்து தனியார்மயமாக்குவது, அதற்கு முன்பாக அவற்றை ஒன்றோடொன்று இணைத்து, பல்லாயிரக்கணக்கான கிளைகளை மூடுவது, ஏழை விவசாயிகளுக்குச் சலுகை வட்டியில் வழங்கப்பட்டு வரும் முன்னுரிமைக் கடனுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, நிரந்தர வங்கிப் பணிகளை மேலும் மேலும் வெளிப் பணியார்களுக்குக் கொடுப்பது உள்ளிட்ட மோசமான பல முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன.
நியாயம் கிடைக்க வேண்டும்!
நம் நாட்டில் 6,32,000 கிராமங்கள் உள்ளன. வணிக வங்கிகள், கிராம வங்கிகள் ஆகியவற்றின் மொத்த கிராமப்புறக் கிளைகள் 49,000ஐத் தாண்டாது. மொத்தமுள்ள கிராமங்களில் 8%க்கும் குறைவான கிராமங்களில் மட்டுமே வங்கிக் கிளைகள் உள்ளன. “வளர்ந்த நாடுகளிலும், பிரிக்ஸ் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளான பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் ஒரு லட்சம் வயது வந்தவர்களுக்கு 40 கிளைகள் உள்ளன. இந்தியாவில் 7 கிளைகள் மட்டுமே உள்ளன” என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. அதன்படி பார்த்தால் தற்போதுள்ள கிளைகளின் எண்ணிக்கை 1.27 லட்சத்திலிருந்து 3.8 லட்சமாக, மூன்று மடங்கு உயர வேண்டும்.
எனவேதான், ‘வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். நிரந்தரப் பணிகளை வெளியாட்களுக்கு விடக் கூடாது. தேவையான எண்ணிக்கையில் நிரந்தரமாக ஆட்களை நியமிக்க வேண்டும். தற்போதுள்ள வெளிப் பணியாட்களை நிரந்தரப்படுத்த வேண்டும் - அதுவரை அவர்களுக்கு, நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்’என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, வங்கி ஊழியர் அமைப்புகள் போராடிவருகின்றன. அவர்களது நியாயமான போராட்டத்துக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவோம்.
- சி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளர்,
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்நாடு
தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com

No comments: