Friday, April 10, 2015

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு லிட்டர் பால்..!



உலகளவில் தற்போது அனைத்து நாடுகளிலும் சத்தின்மையும் அதனால் குழந்தைகள் நோஞ்சான்களாகவும் அதன் விளைவாக பிஞ்சிலேயே நோயாளிகளாக உருவாவதும் பெரும் கவலையளிக்கக்கூடிய விசயமாக மாறி வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஆசிய - ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பிரச்சனை எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா, உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளிலும் ஜரோப்பிய நாடுகளிலும் கூட இந்த நிலைமை நீடிக்கிறது.
இன்றைக்கு உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை கள் அமல்படுத்தப்பட்ட கடந்த 30 ஆண்டுகளில் இந்த நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. சத்தின்மை என்பதை வெறும் போதாக்குறை உணவுப்பிரச்சனையாக மட்டும் கருதிட முடியாது. அது எதிர்காலத் தலைமுறையை கடுமையாக பாதிக்கக்கூடிய மிகவும் சிக்கலான பிரச்சனையாகும். குழந்தைபிறந்ததிலிருந்து 5 வயது வரை மூளைமற்றும் உடலின் முக்கிய உறுப்புகளின் வளர்ச்சிக்கு சத்துணவு அடிப்படையானதும் அவசியமானதுமாகும் என்று மருத்துவ ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.இப்பருவத்தில் போதிய சத்துணவுகிடைக்காவிட்டால் மூளை வளர்ச்சி யானது பாதிக்கப்படும். நாட்டின் எதிர்கால தலைமுறையே அறிவிலிகளாக மாறும் அபாயத்தை கற்பனை செய்து பார்க்கவே அச்சம் தரும்.
இதை உலக நாடுகள் உணராமல் இல்லை. ஆனால் உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த முதலாளித்துவ சமூக அமைப்பு இந்த துயரத்திலேயே ஆதாயம் தேடுகிறது.ஆனால் இந்த நிலையில் இன்னொரு துருவமாக உலக நாடுகளிடையே முற்றிலும் மாறுபட்டுத் திகழ்கிறது சோசலிச கியூபா. அங்கு மக்களின் ஆரோக்கியத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. கியூபா முழுவதும் எப்படித் தேடினாலும் அங்கு சத்தின்மையால் அவதியுறும் குழந்தையையோ அல்லது நோஞ்சான்களையோ காண முடியாது என்று ஐநாவின் குழந்தைகளின் நிதி அமைப்பு அறிக்கை கூறுகிறது. அவ்வளவுஏன், அங்கு பிரசவத்தின் போது அன்னையர் இறப்பு விகிதமும் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. இப்படி ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த நாடாக கியூபா திகழ்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் எடைகுறைவுக் குழந்தைகள் 28 விழுக்காடும், மத்திய கிழக்கு நாடுகளிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் 17 விழுக்காடும், கிழக்கு ஆசியாவிலும் பசிபிக் நாடுகளிலும் 15 விழுக்காடும், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் கரீபியன் நாடுகளிலும் 7 விழுக்காடுமாக உள்ளனர். ஆனால், கியூபாவில் எடை குறைவு என்ற பிரச்சனைக்கே இடமில்லை . இதற்கு காரணம், பல ஆண்டுகளாக அங்கு கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் தீவிரமான நடவடிக்கைகளே. உலகம் முழுவதும் 85 கோடியே 20 லட்சம் மக்கள் பசியால் வாடுகின்றனர். இதில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டும் 5கோடியே 30 லட்சம் மக்கள் பசியால் வாடுகின்றனர். மெக்சிகோவில் 52 லட்சம் மக்களும் ஹைதியில் 8 லட்சம் பேரும் சத்தின்மையால் அவதியுறுகின்றனர். வேடிக்கை என்னவெ னில், அதே லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கியூபாவில் மட்டும் முற்றிலும் மாறுபட்ட நிலைமை. சரி, சத்தின்மையை அறவே நீக்க கியூப அரசு என்ன செய்தது?எத்தனையோ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கியூப அரசு, ஆண்டுக்கு 1 கோடியே 30 லட்சம்டாலர்களை தங்கள் நாட்டுக் குழந்தை களின் சத்துணவுக்காக ஒதுக்கு கிறது.
இந்த விசயத்தில் எந்த சமரசத்திற்கும் இடமின்றி, குழந்தை பிறந்ததிலிருந்தே முழுமையான கண்காணிப்பு தொடங்குகிறது. அந்த கண்காணிப்பு அவர்கள் வளர் இளம் பருவத்தை அடையும் வரை நீடிக்கிறது. பிறந்ததிலிருந்து தாய்ப்பாலுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதற்காக தாயின் உடல் நலத்தைப்பேணிட அவருக்கும் சத்தானஉணவு அளிக்கப்படுகிறது. 6 மாதம் வரை பிற முக்கிய சத்துணவுகளுடன் குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கப்படுகிறது. நாட்டிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் எந்தப் பாகுபாடுமின்றி நாள்தோறும் 6 மாதத்திலிருந்து 7 வயது வரை 1 லிட்டர் பால் அளிக்கப்படுகிறது. அத்துடன் முறையான சத்துணவும் அளிக்கப்படுகிறது. 13 வயது வரை பழச்சாறுகள் மற்றும் இறைச்சிகள் அளிக்கப் படுகினறன. இத்துடன் மலிவான விலையில் சோயாவும் வெண்ணெய் கட்டிகளும் அளிக்கப்படு கின்றன.இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அவசியமான உணவுகள் இலவசமாக அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றனர். அன்றாடம் ஒரு லிட்டர் பாலுடன் தனியே புரதச் சத்துணவுகள் தருவதும் உறுதிப் படுத்தப்படுகிறது.பள்ளிகளில் 15 வயது வரையும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் உணவில்சிறப்பு ஒதுக்கீடுகள் உண்டு. இந்தசிறப்பு ஒதுக்கீடுகளில் கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள்,முதியவர்கள், சிறப்புத் தேவையுடை யோர் மற்றும் நோயுள்ள குழந்தை களுக்கு தனிக் கவனத்துடன் உணவு வழங்கப்படுகிறது. இப்படி அரசின்கண்காணிப்புடன் சத்துணவுத் தேவைகள் நிறைவேற்றப்படுவதால்தான்,
கியூபாவில் சத்தின்மையும் இல்லை; நோஞ்சான் குழந்தைகளும் இல்லை. உலக நாடுகளில் மிகப்பெரிய செல்வந்த நாடு; ஜனநாயக நாடு என்றெல்லாம் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படும் அமெரிக்காவில் நெஸ்லே போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் தாய்ப்பாலை மறைமுகமாக புறக்கணிக்கக்கோரி பால் பவுடர்களுக்கு விளம்பரம் செய்ய பல ஆயிரம் கோடி டாலர்களை செலவழிக்கின்றன. தாய்ப்பாலை புறக்கணிக் கக்கோரும் அந்த கம்பெனிகள் 8 ஆயிரம்கோடி டாலர் அளவிற்கு முகப்பூச்சுஅழகு சாதனங்களின் விளம்பரங் களுக்கு செலவழிக்கின்றன. நோயுறும் குழந்தைகளுக்கு மருந்துகள் மட்டும் 40 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை செய்யப்படுகினறன. இதுதான் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் உண்மை முகம். ஆதாரங்கள் :1. ஐ.நாவின் குழந்தைகள் நிதி அமைப்பு (யுனிசெப்) அறிக்கை 2. கியூபாவின் மருத்துவப் புரட்சி

No comments: